நெடுஞ்சாலையில் ஆடு

ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கே ரமேசின் ஆழ்ந்த உறக்கத்தை செல்போன் அலாரம் கலைத்தது. வார நாட்களிலேயே ஏழு மணிக்கு தான் படுக்கையை விட்டு எழும் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆறு மணிக்கே துயில் கலைக்கவும் ஒரு காரணம் இருந்தது. இரண்டு நாள் முன்பு அவனது நண்பன் கோகுல் அழைத்திருந்தான் "டேய் நண்பா எங்க ஊர்ல வர்ற ஞாயித்துகிழமை கோவில் விசேசம், வீட்ல சாப்பாட்ல இருந்து சரக்கு வரைக்கும் எல்லாம் ரெடியா இருக்கும், காலைல பதினோரு மணிக்கெல்லாம் இங்க இருக்கற மாறி வந்திரு." பதினோரு மணி சரக்கு சாப்பாடு இந்த வார்த்தைகளை காது உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதற்குள் கைகள் செல்போனில் அலாரம் வைத்துவிட்டது.

ரமேஷ் இருப்பது கோயம்புத்தூரில், விருந்து நடப்பது பெருந்துறையில் இரண்டு ஊருக்கும் கிட்டத்தட்ட எழுபது கிலோமீட்டர்கள் எட்டு மணிக்குள்ளாக கிளம்பினால் தான் பத்து பதினோரு மணிக்கெல்லாம் போய் சேர முடியும். சனிக்கிழமை இரவே காருக்கு பெட்ரோல் அடித்தாகிவிட்டது வண்டியை எடுத்தால் நேராக எங்கும் நிற்காமல் பெருந்துறையை நோக்கி பறக்க வேண்டியதுதான், நினைத்துகொண்டே காரை கிளப்பினான் ரமேஷ். எதிர்பார்த்தது போலவே நூறடி ரோடு, காந்திபுரம் டிராபிக் சிக்னல்களை தாண்டி அவிநாசி சாலையை அடைவதற்கே நாற்பது நிமிடங்கள் கடந்து விட்டது. ரமேஷுக்கு வேண்டிய வேகத்தில் வண்டி சென்றாலும் வழி நெடுகிலும் மற்ற வாகனங்களின் நெரிசலால் வண்டி அவிநாசியை அடையவே மணி ஒன்பதாகியிருந்தது.

அவிநாசியை தாண்டும் போது செல்போன் அடித்தது, எதிர்முனையில் கோகுல் "எங்கடா இருக்கே?". "டேய் இப்போ தான் அவிநாசி தாண்டறேன் எப்படியும் லேட் ஆகிடும்னு நெனைக்கிறேன்" என்றான் ரமேஷ்.  "கொஞ்ச தூரம் வந்தா சிக்ஸ் டிராக் ரோடு வந்துடும், அசால்டா நூறுல வரலாம். சீக்கிரம் வாட அப்புறம் சரக்கு தீந்துடும்" சொல்லிவிட்டு போனை வைத்தான் கோகுல். அவன் சொன்னது போலவே பறந்து விரிந்த ஆறு வழி சாலை கண்ணில் பட்டது, நெரிசலே இல்லாத சாலை. கணக்கு பரிட்சையின் கடைசி முப்பது நிமிடத்தில் பக்கத்தில் அமர்திருப்பவன் "பார்த்து எழுதிக்கோ மச்சி" என்று சொல்லும்போது ஏற்படும் சந்தோசத்தைவிட அதிகமான சந்தோஷம் ரமேஷ் மனதில் பீரென பொங்கியது.

ரம் ஊற்றிவிட்ட பந்தய குதிரையை போல் பறந்தது ரமேஷின் கார். மெதுவாய் மீட்டரை பார்த்தான் முள் நூறை தாண்டி தடுமாறி கொண்டிருந்தது. ஆறு வழி சாலயதளால் எதிரே வண்டிகள் ஏதும் வரவில்லை மற்ற வாகனங்களின் நெரிசலும் இல்லை எனவே இன்னும் வேகத்தை கூட்டினான். கோவையில் இருந்து அவிநாசி வரைக்கும் முட்டி மோதி வண்டி ஒட்டியதில் ஏறிய சூட்டை இந்த ஆறு வழி சாலை ராக்கெட் பயணம் தணிக்க துவங்கி இருந்தது. தூரத்தில் ஒரு லாரி பெருஞ்சுமையை ஏற்றி ஊர்ந்து கொண்டிருந்தது, ஓவர்டேக் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் லாரிக்கு அருகில் சென்றிருந்தது கார்.

காரில் இருந்த குதிரை வேகம் இப்போது அவனது இருதய துடிப்பில் தொற்றிக்கொண்டது, ஒருவழியாய் வளைத்து ஒடித்து லாரியை முந்திச் சென்றான். காரின் வேகத்தை குறைத்து கண்ணாடியில் பின்னாடி வரும் லாரியை ஒரு முறை பார்த்துவிட்டு சுதாரிப்பதற்குள் சாலையின் ஓரத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் இருந்து ஒரு ஆட்டு குட்டி துள்ளி குதித்து சாலையில் பாய்ந்தது, ரமேஷ் என்ன செய்வதென்று யோசிப்பதற்குள் ஆட்டுக் குட்டியின் மேல் கார் இடித்து அது நான்கடி தள்ளி தெரித்து விழுந்து துடி துடித்தது. என்ன செய்வதென்று தெரியாமல் படபடப்பில் வேகத்தை கூட்டினான், சில கிலோமீட்டர்கள் தள்ளி போய் வண்டியை நிறுத்தினான்.


ஒரு வேலை இந்நேரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் நம்மை கடும் வார்த்தைகளால் ஏசிக் கொண்டிருப்பானோ? மோதிய இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லையே. வண்டியை நிருத்தாமல் வந்தது தவறோ? அந்த ஆட்டுக்குட்டி உயிர் பிழைத்திருக்குமா இறந்திருக்குமா? ச்சே நமக்கு மனிதாபிமானமே இல்லாமல் போய் விட்டதா? யாருடைய தவறு? ரோட்டிலா ஆடு மேய்ப்பது? இதில் நம் தவறு என்ன? அவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விக்கணைகள் புறப்பட்ட நேரதில் செல்போன் அலறியது, மறுமுனையில் கோகுல்.

"ரமேஷ் எங்கடா இருக்கே இந்நேரத்துக்கு வந்திருக்கணுமே?". "வர்ற வழியில ஒரு ஆட்டுக்குட்டிய தூக்கிட்டேன் அதான் திரும்பி போய் பார்த்துட்டு ஆடு மேய்க்கிரவங்க யாராவது இருந்த பணமாவது குடுத்திட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்டா". "முட்டாள் அப்படி எதாவது பண்ணிடாதடா, சிக்குனினா அவ்ளோ தான் சாமிக்கு நேந்து விட்ட ஆடு ரெண்டாயிரம் குடு மூணாயிரம் குடுன்னு உருவிடுவாணுக, பேசாம வந்து சேருற வழிய பாரு". "ம்ம்ம்ம் நீ சொல்றதும் சரி தான் மூடே ஸ்பாயில் ஆய்டுச்சுடா, அந்த ஆட்டுக்குட்டி கண்ணுகுல்லையே இருக்கு". "டேய் நொச நொசன்னு பேசாம சீக்கிரம் வா". பல யோசைனைகள் மூளைக்குள் ஓட வண்டியை கிளப்பினான் ரமேஷ். மீண்டும் அரைமணி நேர பயணத்தில் கோகுலின் வீட்டை அடைந்தது கார்.

ரமேஷை தனது பெற்றோர்களிடம் அறிமுகம் செய்துவிட்டு தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றான் கோகுல். "என்னடா ரமேஷ் இன்னும் மூளைக்குள்ள ஆட்டுக்குட்டி கத்துதா?". "ஆமாண்டா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா". "ப்ரீய விடுடா அங்க பாரு நம்ம பய புள்ளைக உனக்காகத்தான் காத்திட்டு இருகுராணுக" சொல்லிக்கொண்டே ஒரு கூரை சாலைக்குள் அழைத்து சென்றான், உள்ளே சக வயது மதிக்க தக்க நான்கு பேர் அமர்திருன்தனர். "டேய் மச்சி இவன்தாண்ட ரமேஷ் என்னோட பிரண்டு, ரமேஷ் இவனுகெல்லாம் நம்ம ஊர் பசங்கட சின்ன வயசில் இருந்தே ஒன்ன தான் சுத்துவோம்".

சிறிது நேர உரையாடலக்கு பிறகு ஒளித்து வைத்திருந்த பீர் பாட்டில்களை வெளியே எடுத்தான் கோகுல், அனைவரும் கச்சேரியில் சங்கமம் ஆகி கடைசி சொட்டு வரை குடித்து விட்டு வெளியே வந்தார்கள். அடிக்கிற வெய்யிலுக்கு மப்பு இதமாய் இருந்தது, அப்படியே இரண்டு மணி நேரம் தென்னதோப்புக்குள் வெட்டிக் கதை பேசி ஒட்டினார்கள். வீட்டில் இருந்த வேலையாள் வந்து "தம்பிகளா விருந்து ரெடியாமா உங்க எல்லாரையும் சாபட்ரக்கு வர சொன்னங்க" என்றான். "சரி வாங்கடா போய் சாப்பிடலாம்" என்றான் கோகுல். "டேய் என்னடா அங்க போன பீர் ஸ்மெல் அடிக்காதா?" என்று கேட்ட ரமேஷிடம், "ஆமா இல்லைனா மட்டும் நம்மள யோகியன்னு நம்பிடுவாங்க பாரு, வாங்கடா" சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தான் கோகுல்.

இவர்கள் உள்ளே போகும்போதே பந்தியில் இலை போடப்பட்டு உணவு பரிமாறத் தொடங்கி இருந்தார்கள். காலையில் அவசரமாய் கிளம்பியதால் இரண்டு இட்லிகளை மட்டுமே உள்வாங்கி இருந்த ரமேஷின் வயிறு உள்ளே ஊற்றப்பட்ட பீருடன் சேர்ந்து தக தகவென எரிந்தது, எதை போட்டாலும் ஒரு கட்டு கட்டுவிட வேண்டியது தான் என்ற முடிவோடு பந்தியில் அமர்ந்தான். ஒவ்வொரு இலையாக பரிமாறிக்கொண்டே வந்தார்கள் ரமேஷின் இலையிலும் உணவு பரிமாறப்பட்டது அருகில் இருந்த கோகுல் "நல்லா சாப்புடுடா மட்டன் பிரியாணி சூப்பரா இருக்கும். எங்க தோட்டத்திலேய வளர்துன ஆடு." என்றான். ஆடு, மட்டன் கோகுல் சொன்ன வார்த்தைகள் ரமேஷுக்கு சட்டென்று வரும் வழியில் தான் வண்டியில் மோதிய ஆட்டுக்குட்டியை நினைவுக்கு கொண்டு வந்தது. இலையை உற்றுப் பார்த்தான் ரத்த வெள்ளத்தில் ஆட்டுக்குட்டி துடிப்பது போல் இருந்தது. மெதுவாய் கண்ணை மூடினான் மண்டைக்குள் ஆட்டுக்குட்டியின் கதறல் கேட்டது. இலையில் கைவைக்க முடியாமல் சட்டென எழுந்து வெளியே சென்றான்.

4 comments:

Kousalya Raj said...

தாமதமானாலும் நம் மனசாட்சி நம்மை தட்டி எழுப்பிவிடும்...! அருமையான பகிர்வு.

pichaikaaran said...

சுருக்கமாக, கச்சிதமாக எழுதி இருக்கிறீர்கள்..
சூப்பர்

சர்பத் said...

நன்றி

Dr. சாரதி said...

அருமையான கதை....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...