அப்பன் காசு

நான்கு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், என்னிடம் அப்போது பைக் இல்லை கல்லூரிக்கு பேருந்தில் தான் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து செல்லும்போது என் சக வயது மாணவர்கள் பல்சர்களிலும், கரிஸ்மாக்களிலும் சீறிக்கொண்டு செல்லும் போது மனதுக்குள் தோன்றும் "ம்ம்ம்ம்...அப்பன் காசு என்னமா சீன் போட்ராணுக".

சனிக்கிழமைகளில் நண்பர்கள் புடைசூழ சினிமாவிற்கு செல்வது வழக்கம். நாங்கள் ஆறு பேர் எங்கு சென்றாலும் எப்போதும் ஒன்றாக செல்வோம், அதனால் மூன்று பைக் வேண்டும். ஆறு பேரில் இரண்டு பேரிடம்தான் பைக் இருக்கும் எனவே மூன்றாவது பைக்கை ஏற்பாடு செய்வதில் தான் எப்போதும் சிக்கல். அப்பா வீட்டில் இருந்தால் கெஞ்சி கூத்தாடி அவரது பைக்கை வாங்கி செல்வேன் இல்லையென்றால் பைக் வைத்திருக்கும் நண்பர்களிடம் ஓசி வாங்க வேண்டும். எப்படியோ மூன்றாவது பைக்கை ஏற்பாடு செய்து ஆறு பேரும் கிளம்பினோம், வழியில் எங்களை பார்த்த ஒரு மொக்கை நண்பன் தானும் வருவதாக அடம் பிடிக்க வேறு வழி இல்லாமல் ஒரு பைக்கில் ட்டிரிப்பில்ஸ் அடித்தோம். போலீஸ் கண்ணில் சிக்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக பஸ்சுக்கு பின்னாலும் லாரிக்கு பின்னாலும் ஒதுங்கி ஒதுங்கி சென்றோம்.


டிராபிக் அதிகமாய் இருந்தது, போதாதென்று மழை வேறு மெலிதாய் தூர ஆரம்பித்தது கொஞ்சம் வேகமாய் செல்ல எத்தனித்த போது சரியாக சிக்னல் விழுந்தது. டிராபிக் நெரிசல், சிக்னல், தூறும் மழை, பைக்கில் ட்டிரிப்பில்ஸ், தூரத்தில் நின்றிருக்கும் போலீஸ்காரர் அனைத்தும் சேர்ந்து எரிச்சலை கொஞ்சம் கொஞ்சமாய் தூண்டிக்கொண்டிருக்க சர்ர்ர்ரர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. உள்ளே என் வயதோ இல்லை என்னைவிட இரண்டு மூன்று வயதோ கூட இருக்கும் ஒரு இளைஞன், கார் கண்ணாடி பாதி இறங்கியிருக்க சில் சில் என்று தெறிக்கும் அளவுக்கு பாட்டு சத்தம் வெளியில் கேட்டுக்கொண்டிருந்தது. மூன்று பைக்கில் ஏழு பேர் அவதி பட்டுக் கொண்டிருக்க ஒற்றையாய் காரில் அவன். என் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நண்பன் சொன்னான் "அப்பன் காசு மச்சி, என்னம்மா சீன் போட்ராணுக பாருடா".

அப்போது தான் மெலிதாய் இருந்த அந்த எண்ணம் வலுத்தது, சொந்தமாய் ஒரு வண்டி இல்லாமல் எவ்வளவு கஷ்டம்... படித்து முடித்து வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு பைக்கோ காரோ வாங்க வேண்டும். ஆறேழு மாதங்கள் உருண்டன, கடைசி வருட தேர்வுகள் முடிந்தது அடித்து பிடித்து ஒரு நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. பெரிய பைக் வாங்க நினைத்தாலும் அப்பாவின் உடன்பாடு இல்லாத காரணத்தால் ஸ்பிளென்டர் வாங்கினேன். மீண்டும் வருடங்கள் உருண்டன, ஒரு பெரிய பைக் வாங்கி விடுவது என்று முடிவு செய்தேன். நான் பைக் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது நண்பன் ஒருவன் குழப்பினான் "டேய் நீ எழுபது எண்பதாயிரம் பைக்குக்கு செலவு பண்றதுக்கு பதிலா லோன் போட்டு கார் வாங்கிடு மச்சி. நல்ல யோசிச்சு பாரு இன்னும் ரெண்டு மூணு வருசத்துல்ல இன்கிரிமெண்டு புரமொசன்னு எப்படியும் உன்னோட சம்பளம் 50% அதிகம் ஆகிடும் அப்புறம் லோன் கட்றது ஒன்னும் பெரிய விஷயமா தெரியாது". அவன் சொன்னது கொஞ்சம் குழப்பினாலும் சரி தான் போலும் என்று தோன்றியது.


கார் என்று முடிவு செய்த பிறகு என்ன கார் வாங்குவது என்று தெரியவில்லை. கார் வைத்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் ஆலோசித்து பல கார் பற்றிய இணையதளங்களை அலசி ஆராய்ந்து, தட்டு தடுமாறி, குழம்பி பின்னர் தெளிவாய் இருப்பதாய் நானே நம்பி இந்த கார் வாங்குவது என்று முடிவு செய்தேன். பல பேருக்கு போன் செய்தால் "டேய் ராசா எத்தன தடவடா சொல்றது ஏதோ ஒரு காரை வாங்கித்தொளடா... உனக்கு வெளக்கம் சொல்லியே என் காரை பார்த்தா எனக்கே கடுப்பு ஆகுது. இப்பெல்லாம் பஸ்ல தான் போறேன் தெரியுமா" என்று நொந்து போகும் அளவுக்கு பல பேரை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அடுத்து வாழ்கையில் முதன் முதலாக லோன் வாங்குகிறேன், அதையும் பல பேரிடம் விசாரித்து, சரி இந்த வங்கியில் கடன் வாங்குவது என்று முடிவு செய்தேன். பத்துப் பதினைந்து நாள் அலைந்து லோள் பட்டு லோன் வாங்கி கார் டீலரையும் ஒரு வழியாக்கி கடைசியில் ஒரு நல்ல நாள் பார்த்து காரை வாங்கிவிட்டேன்.

சனிக்கிழமைகளில் படத்துக்கு செல்லும் வழக்கத்தை இன்னும் விடவில்லை. என்ன இப்போது அவ்வளவு பெரிய நண்பர் வட்டாரம் இல்லை, அவன் அவனுக்கு நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் இந்த அவசர யுகத்தில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். என்னுடன் வேலை செய்யும் சக நண்பன் தான் நேராக தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து வைத்து காத்திருப்பதாக சொல்ல நான் புது காரில் தனியாக கிளம்பினேன். வானம் மழை மேகங்களால் சூழ்ந்திருக்க காற்றும் சில்லென்று வீச கார் கண்ணாடியை மெலிதாய் இறக்கி விட்டு மிதமாய் வண்டியை ஓட்டியபோது அருமையாய் உணர்ந்தாலும் "என்னடா இது அவசர பட்டு கடன் வாங்கி கார் வாங்கிட்டமோ, கொஞ்சம் காசு சேர்த்துட்டு வாங்கியிருக்கலாமோ.." என்ற எண்ணமும் வந்து சென்றது. மழை மெதுவாக தூர ஆரம்பித்தது கொஞ்ச தூரம் சென்றதும் சிக்னல் விழுந்தது மெதுவாய் காரை நிறுத்தினேன். வலது புறம் ஒரு பைக், அதில் மூன்று பேர். அவர்களை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து சென்றது ஒரு வேலை கார் இல்லையென்றால் நாமும் இப்படி தான் இருந்திருப்போமோ?

பைக்கில் இருந்தவர்கள் காரை உற்றுப்பார்த்தார்கள், பின்னால் அமர்ந்திருந்தவன் முன்னாள் இருந்தவனிடம் ஏதோ சொன்னான். ஒரு வேலை "அப்பன் காசு என்னமா சீன் போடறான் பாரு!" என்றிருப்பானோ?.

3 comments:

Philosophy Prabhakaran said...

வாங்க நண்பா... இரண்டு வாரமா எங்கே போயிருந்தீங்க....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா.. நல்ல நடை...

சர்பத் said...

@ prabha
கொஞ்சம் வேலை பளு :)

@பட்டாபட்டி
நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...